காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சி 5-வது வார்டு கரகத்து முனுசாமி தெருவில் வசித்து வந்தவர் மாது இறந்து விட்டார். இவரது மனைவி சுகுணா.
இந்த தம்பதியரின் மகள் ஜோதிலட்சுமி (வயது 16). இவர் காரிமங்கலம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பில் 400-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றார்.
மேலும் அதே பள்ளியில் கடந்த ஜூன் 9-ந்தேதி 11-ம் வகுப்பில் கணித பாடப் பிரிவில் சேர்ந்து படித்து வந்தார். ஆனால் எனக்கு கணித பாடப்பிரிவு வேண்டாம் இன்றே அறிவியல் பாடப்பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று தனது தாயிடம் அழுது புலம்பியதாக கூறப்படுகிறது.
ஆனால் தாய் சுகுணா வருகிற திங்கட்கிழமை அன்று பள்ளிக்கு வந்து பாடப் பிரிவை மாற்றம் செய்து தருகிறேன் என்று கூறி உள்ளார்.
ஆனாலும் கோபம் குறையாமல் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் துப்பட்டாவால் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காரிமங்கலம் போலீசார் பிரேத பரிசோதக்காக மாணவியின் உடலை கைபற்றி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதனால் நன்கு படித்த மாணவி தற்கொலை செய்து கொண்டதால் அந்த தெருவே சோகத்தில் காணப்பட்டது.