காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ஞானதீபம். இவரது மகள் மேரி. இவர் கணவர் ஸ்டான்லி ஞான ராஜுடன் திருச்சியில் வசித்து வருகிறார்.
சென்னையில் உள்ள சுங்க இலாகா அலுவலகத்தில் ஸ்டான்லி ஞானராஜ் அதிகாரியாக உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மேரி, தனது மகள்கள் விஜிலா, ஜெபா ஆகியோருடன் அருப்புக்கோட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார்.
அதன் பிறகு தாய் மற்றும் குழந்தைகளுடன் மேரி திருச்சிக்கு புறப்பட்டார். அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை சென்ற பஸ்சில் அவர்கள் ஏறினர்.
அந்த பஸ் கல்குறிச்சி வந்தபோது ஒரு இளம்பெண் கைக்குழந்தையுடன் பஸ்சில் ஏறினார். அவர் மேரியின் அருகில் அமர்ந்திருந்தார்.
காரியாபட்டி முக்கு ரோடு நிறுத்தத்தில் அந்த பெண் இறங்கிச் சென்றதும் மேரி தனது பையை பார்த்துள்ளார். அதில் இருந்த 16 பவுன் நகை மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து காரியாபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. தனது அருகில் இருந்த பெண் தான் நகையை அபேஸ் செய்து சென்றிருக்கலாம் என மேரி தெரிவித்தார்.
அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் காரியாபட்டி முக்குரோடு பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமிரா மூலம் ஆய்வுப்பணி செய்தனர்.
இதில் பஸ்சில் இருந்து இறங்கிய பெண் ஆட்டோவில் ஏறிச் சென்றது தெரியவந்தது. அவர் தான் நகையை எடுத்துச் சென்றாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.