செய்திகள்

காரியாபட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை

காரியாபட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள தோப்பூர் கிராமம் காலனியை சேர்ந்தவர் அய்யனார். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி.

இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு பொருட்கள் வாங்குவதற்காக காரியாபட்டிக்கு சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 25 பவுன் நகையை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.

மாலையில் வீடு திரும்பிய சாந்தி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த காரியாபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாயும் வரவழைக்கபபட்டது. கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.