நாகர்கோவில்:
குமரி மாவட்டத்துக்கு கூடுதலாக 3 ஆம்புலன்சு வழங்க முதல்- அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்கி வருவதோடு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான உணவு உள்ளிட்ட மருத்துவ வசதிகளையும் வழங்கி வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தனியார் உணவகங்கள் மூலம் வழங்கப்படும் உணவு முறைகள், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட விவரங்களை நேரில் விளக்கி கூறினேன். ஈரான் நாட்டில் தங்கியிருந்த குமரி மீனவர்களை, தாய் தமிழகத்திற்கு அழைத்து வந்தமைக்காக குமரி மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் பங்குதந்தையர்கள் சார்பில் நன்றி தெரிவித்தேன்.
பொதுமக்களுக்கு ரேசன்கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விலையில்லா கொரோனா நிவாரண பொருட்கள் குறித்து முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். குமரி மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நோயாளிகளின் வசதிக்காக கூடுதலாக ஆம்புலன்சு வழங்க வேண்டும் என்று முதல்- அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன்.
இந்த கோரிக்கையை ஏற்ற அவர் குமரி மாவட்ட மக்களின் வசதிக்காக கூடுதலாக 3 ஆம்புலன்சுகளை (108) வழங்க உடனே உத்தரவிட்டார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.