ஹுஸ்டன்:
சாதாரண பிரச்சனைக்கு தீர்வு காண விபரீத முடிவு எடுப்பவர்களை மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டுக்கு தீவைப்பதா என்று சொல்வது வழக்கத்தில் உள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில் அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் கன்சாஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரவு நேரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த வீட்டில் குடியிருந்தவரின் படுக்கை அறையில் மூட்டைப்பூச்சி இருந்தது. இது அவரை தூங்கவிடாமல் கடித்துக் கொண்டே துன்புறுத்தி கொண்டிருந்தது. எனவே, அதை கொல்ல அவர் தனது சிகரெட் லைட்டர் மூலம் தீவைத்து எரித்தார்.
அந்த தீ எதிர்பாராத விதமாக ‘மளமள’வென பல இடங்களுக்கும் பரவியது. இதனால் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இத்தகவலை தீயணைப்பு படை அதிகாரி மைக்மார்டின் தெரிவித்தார். இந்த தீ விபத்தில் மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.