செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஜெயந்திக்கு தீவிரசிகிச்சை

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் கன்னட நடிகை ஜெயந்திக்கு தீவிரசிகிச்சை #Jayanthi

பெங்களூரு:

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங் களில் நடித்தவர் ஜெயந்தி.

76 வயதாகும் இவர் 18 வயதில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். நடிகையாக மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார்.

1963-ம் ஆண்டு மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் என்ற தமிழ் படத்தில் அறிமுகம் ஆனார். இதைத்தொடர்ந்து இருவர் உள்ளம், அன்னை இல்லம், படகோட்டி, கர்ணன், எதிர்நீச்சல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன், முத்து ராமன், நாகேஷ், ஜெய்சங்கர் உள்ளிட்ட பிரபல நடிகர் களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் முதலில் அறிமுகமான கன்னட படமான ஜீனுகூடு படத்தை இயக்கிய டைரக்டர் சிவராமை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கிருஷ்ணகுமார் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பெங்களூருவில் உள்ள தனது மகன் கிருஷ்ணகுமாருடன் வசித்து வந்த நடிகை ஜெயந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்கனவே ஆஸ்துமா நோயால் அவதிப்பட்ட அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.