செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் கந்து வட்டி கொடுமையால் இளம்பெண் தற்கொலை

ஒட்டன்சத்திரத்தில் கந்து வட்டி கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் காந்திநகர் 6-வது வார்டைச் சேர்ந்தவர் பூபதி (வயது 40). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விமலா தேவி (31). இவர்களுக்கு பிரனேஷ் (11), ஷிவானி (6) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். விமலா தேவி குடும்ப தேவைக்காக அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பைனான்ஸ் நிறுவனத்திலும் தனியாரிடமும் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார்.

அதற்கு மாதா மாதம் வட்டி தொகையை செலுத்தி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வட்டி கட்ட முடியவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் அவரது வீட்டின் முன்பு நின்று தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி விட்டு சென்றனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று வேலை முடித்து வீட்டுக்கு திரும்பிய பூபதி தனது மனைவி மயங்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

வட்டி பணம் கட்டாததை சுட்டிக்காட்டி விமலா தேவியை திட்டியதால் அவர் வி‌ஷமாத்திரைகளை தின்று தற்கொலை செய்தது தெரிய வந்தது. தனது தாய் இறந்ததைக் கண்டு 2 குழந்தைகளும் கதறி அழுதனர்.

மேலும் உறவினர்கள் போலீசாரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews