செய்திகள்

கமுதியில் நகை பட்டறையில் 26 பவுன் நகை- 10 கிலோ வெள்ளி கொள்ளை

கமுதியில் நகை பட்டறையில் 26 பவுன் நகை மற்றும் 10 கிலோ வெள்ளி கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கமுதி:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி காசுக்கார பஜார் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 42). இவர் தனது வீட்டின் கீழ் பகுதியில் ஓம்சக்தி என்ற பெயரில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் முத்து கிருஷ்ணன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் நகை பட்டறையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த 26 பவுன் நகை, 10 கிலோ வெள்ளி, ரூ 1000 ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

இன்று அதிகாலை பட்டறையை திறக்க வந்த முத்து கிருஷ்ணன் நகைப்பட்ட றையின் கதவு உடைக்கப்பட்டு நகை, வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் கமுதி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி மற்றும் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த நகை பட்டறையை பார்வையிட்டனர்.

தொடர்ந்து தடய வியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மேலும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன.

கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.