கமுதி:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி அலுவலக செயல் அலுவலராக இருப்பவர் குமரேசன். இவர் நேற்று அலுவலக பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அங்கு தி.மு.க. தொண்டரணி அமைப்பாளர் கேசவன் வந்தார். அவர் டெண்டர் பணிகள் தொடர்பாக செயல் அலுவலர் குமரேசனிடம் பேசிக் கொண்டு இருந்தார்.
இதில் திடீரென கேசவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த அவர் குமரேசனை தாக்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் கேசவனை தடுக்க வந்தனர்.
இந்த மோதலில் பேரூராட்சி அலுவலக பில் கலெக்டர் சேதுபதி மண்டை உடைந்தது. அவர் சிகிச்சைக்காக கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அலுவலகத்தில் புகுந்து அதிகாரியை தாக்கிய சம்பவம் கமுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் சக்கரபாணி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
செயல் அலுவலர் குமரேசன் கொடுத்த புகாரின் பேரில் திமு.க. தொண்டரணி அமைப்பாளர் கேசவன் கைது செய்யப்பட்டார். அவரது புகாரின்பேரில் செயல் அலுவலர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.