ஜெய்ப்பூர்:
மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஜோதிர் ஆதித்யா சிந்தியா போர்க்கொடி உயர்த்தியதின் விளைவால்
காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.
அதையடுத்து அங்கு சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் மீண்டும் பா.ஜ.க. அரசு பதவிக்கு வந்தது. ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகி அவருடன் பா.ஜ.க.வில் சேர்ந்தனர்.
இதையடுத்து, அந்த மாநில சட்டசபையில் காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.-வும், இழந்த ஆட்சியை மீட்க காங்கிரசும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. இதற்காக, இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், இந்த தேர்தல் நேற்று நடந்த பிரசார நிகழ்ச்சியில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசார நிகழ்ச்சியில் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, ‘கமல்நாத் ஜி என்னை நாய் என்று அழைத்தார். ஆம் நான் நாய் தான் ஏனென்றால் நான் மக்களின் சேவகன்... எனென்றால் நாய் அதன் உரிமையாளர்களை பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் யாரேனும் ஊழல் மற்றும் தேவையற்ற விதிகளை கொண்டுவரும் போது அவர்களை இந்த நாய் தாக்கும்’ என தெரிவித்தார்.
ஜோதிராதித்ய சிந்தியாவின் கருத்துக்கு மத்திய பிரதேச முன்னாள் முதல்மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்நாத் கூறுகையில், ‘அசோக் நகரில் வைத்து நான் அவரை நாய் என்று கூறியதாக ஜோதிராதித்ய சிந்தியா கூறுகிறார். நான் அவரை அது போன்று அழைக்கவும் இல்லை. அப்படி அழைக்கவும்மாட்டேன்... இதற்கு அசோக் நகர் மக்களே சாட்சி’ என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.