சென்னை:
தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டின், தமிழ் மக்களின் வளங்களை வாரிச்சுருட்டி செல்வது போல் உள்ளது பட்ஜெட். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அரசு கடைப்பிடித்த நிதி நிர்வாகத்தால் தமிழகத்தின் ஆண், பெண் குழந்தைகள் மற்றும் இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகள் என ஒவ்வொருவரின் தலையிலும் சுமார் 57,000 ரூபாய் கடன் சுமை இன்றைய தேதி வரை ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழர்கள் ஒவ்வொருவரையும் கடனாளியாக மாற்றிய ஒன்று தான் இந்த இரு அரசுகளின் சாதனை.
நிதி ஆதாரத்தை பற்றிய எவ்வித கவலையும் இல்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது அ.தி.மு.க. அரசு. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அரசுகள் கடைபிடித்த தவறான பொருளாதார கொள்கைகளால் தான் ஒவ்வொரு தமிழரும் கடனாளியாக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை அகற்றுவோம். தமிழக வருமானத்தைக் கூட்டுவோம். கடனில்லாத் தமிழகத்தை உருவாக்குவோம். மக்கள் கைகோர்த்தால் நீதி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.