செய்திகள்

தமிழகத்தில் மழை பெய்தும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை - கமல்ஹாசன்

தமிழகத்தில் அதிக மழை பெய்தும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட வில்லை என்று கமல்ஹாசன் குற்றம் சாட்டினார். #KamalHaasaan

மாலை மலர்

மதுரை:

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தார்.

நேற்று நாகமலை புதுக்கோட்டையில் பிரசாரத்தை தொடங்கிய அவர் பல்வேறு பகுதிகளுக்கும் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் தற்போது முக்கிய பிரச்சினையாக உள்ளது குடிநீர். இதனை தீர்க்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களுக்கு குடிநீர்தான் முக்கியம். குடிமராமத்து செய்யாமலேயே செய்ததாக கூறி ஆட்சியாளர்கள் கணக்கு காட்டுகின்றனர். மக்கள் மீது நேசம் இல்லாமல், அவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் ஆட்சி நடக்கிறது.

ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை விட தமிழகத்தில்தான் மழை அதிகமாக பெய்கிறது. இதை நான் சொல்லவில்லை. விஞ்ஞான ரீதியாக சொல்லப்படுகிறது. ஆனால் குடி நீருக்காக தண்ணீரை அரசு பாதுகாப்பதில்லை.

தமிழகத்தில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. மக்களை விலைக்கு வாங்க வசதியாக அவர்களை ஏழைகளாகவே ஆட்சியாளர்கள் வைத்துள்ளனர்.

அ.தி.மு.க-தி.மு.க. ஆகிய இரு கார்ப்பரேட் நிறுவனங்களும் அழிய வேண்டும். அவர்களிடம் பணம் உள்ளது. எங்களிடம் இல்லை. மக்களாகிய நீங்கள்தான் தலைவர்கள். அரசியல்வாதிகள் உங்களது சேவகர்கள்.

மக்களை நம்பிதான் நான் களம் இறங்கி இருக்கிறேன். உங்கள் ஓட்டுகளை விலை கொடுத்து விடாதீர்கள். மக்கள் நினைத்தால் மாற்றம் உறுதியாக ஏற்படும். அதற்கான விதைகள் தூவுவோம். மக்களின் அன்பு எங்களுக்கு அதிகமாக உள்ளது.

உங்கள் குழந்தைகளுக்காக நான் பேசுகிறேன். அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை இப்போதிருந்தே செய்ய தொடங்குங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். #KamalHaasaan