களியக்காவிளை:
குமரி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்துவதை தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர சோதனை
நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விளவங்கோடு வட்டவழங்கல் அதிகாரி தினேஷ் சந்திரன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரி
மைக்கேல் சுந்தர்ராஜ் மற்றும் அதிகாரிகள் குழித்துறை அருகே படந்தாலுமூடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வாழைக்குலைகளை ஏற்றிக்கொண்டு கேரள பதிவு எண் கொண்ட டெம்போவை அதிகாரிகள் கையை காட்டி நிறுத்த
கூறினார்கள். ஆனால் டிரைவர் நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். உடனே அதிகாரிகள் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று ஒற்றாமரம்
பகுதியில் வைத்து டெம்போவை மடக்கி பிடித்தனர். உடனே டிரைவர் கீழே இறங்கி ஓடிவிட்டார். டெம்போவை அதிகாரிகள் சோதனை செய்த போது
வாழை குலைகளுக்கு கீழே சுமார் 4 டன் ரேஷன் அரிசி இருந்தது. அதை கேரளாவிற்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
அரிசியை டெம்போவுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்து விளவங்கோடு வட்டவழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி உள்ளனர். டெம்போவில் வாழை குலைக்கு அடியில் ரேஷன் அரிசி மூட்டைகளை வைத்து கேரளாவுக்கு கடத்தியது யார்? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.