செய்திகள்

தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிப்பு

பி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை சென்னை சி.பி.ஐ கோர்ட் விடுவித்து உத்தரவிட்டது.

மாலை மலர்

சென்னை:

மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரியாக தயாநிதிமாறன் பதவி வகித்தபோது, பி.எஸ்.என்.எல் அதிவேக இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தி சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் அவரது சகோதரர் கலாநிதி மாறன், சென்னை பி.எஸ்.என்.எல் முன்னாள் பொது மேலாளர் கே.பிரம்மநாதன், முன்னாள் துணைப்பொதுமேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலெக்ட்ரீஷியன் ரவி ஆகிய 7 பேர் மீது சி.பி.ஐ போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதுதொடர்பாக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 7 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி 7 பேர் சார்பிலும் சி.பி.ஐ நீதிமன்றத்தில் கடந்த 2017 அக்டோபரில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை சென்னை சி.பி.ஐ 14-வது சிறப்பு நீதிபதி நடராஜன் முன்பாக நடந்து வந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். #TamilNews