களக்காடு:
களக்காடு அருகே உள்ள மூங்கிலடி வெப்பல் கீழத்தெருவை சேர்ந்தவர் ரமேஸ்பாலன். இவரது மனைவி பாலரேவதி (வயது 30). ரமேஸ்பாலன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் பாலரேவதி தனது 2 மகன்களுடன் மூங்கிலடியில் தனியாக வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த பால்துரைக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
சம்பவத்தன்று மாலை பாலரேவதியின் மகன் 4-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் போது பால்துரை மகன் பிரபாகரன் (19) சிறுவனை அவதூறாக பேசி தாக்கினார்.
இதுகுறித்து பாலரேவதி களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரபாகரனை தேடி வருகின்றனர்.