ஸ்ரீகாளஹஸ்தி:
காளஹஸ்தி அடுத்த குக்கலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜமுனா. இவருடைய மகள் பாவனி (வயது 26). ஜமுனா தன்னுடைய மகளை, உடன்பிறந்த தம்பியான ஷியாம்குமாருக்கு திருமணம் செய்து வைத்தார்.
அவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதே கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான குர்ரப்பா என்பவர் பாவனிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
இதுபற்றி அவர், குக்கலப்பள்ளி கிராம பெரியோர்களிடம் முறையிட்டார். கிராம முக்கியஸ்தர்கள் பஞ்சாயத்தை கூட்டி இரு தரப்பைச் சேர்ந்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பாவனிக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுக்கக்கூடாது என குர்ரப்பாவுக்கு பெரியோர்கள் எச்சரிக்கை விடுத்தனர். எனினும், அவரின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சாடையில் பேசியும், சைகை காண்பித்தும் பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தார்.
இதையடுத்து பாவனி தான் வசித்து வந்த வீட்டை அங்குள்ள பைபாஸ் சாலைக்கு மாற்றி விட்டார். அங்கு வந்தும் குர்ரப்பா சாடையில் பேசியும், சைகை காண்பித்தும் பாவனிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மனவேதனை அடைந்த பாவனி யாதமரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, பாலியல் தொல்லையால் மனமுடைந்த பாவனி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் மனோகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பாவனிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த குர்ரப்பாவை கைது செய்தனர். #Tamilnews