ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில், கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெறவுள்ள திருவிழாவில் கலந்துகொள்வதற்காக செல்லவுள்ள யாத்திரீகர்களை பாதுகாப்பாக அனுப்பி, திரும்ப அழைத்து வருதல் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் சார் ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்ததாவது:-
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் வருகிற 6-3-2020 மற்றும் 7-3-2020 ஆகிய தினங்களில் நடை பெறவுள்ள திருவிழாவில் கலந்து கொள்வதற்கு செல்லும் யாத்திரீகர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் சென்று வர வேண்டும்.
திருவிழாவிற்கு செல்லும் அனைத்து யாத்திரீகர்களும் கட்டாயமாக உயிர்காக்கும் மிதவை அணிய வேண்டும். அவசர சூழ்நிலைக்கு ஏற்ற வாறு யாத்திரீகர்கள் புறப்படும் இடத்தில் மருத்துவ குழுவினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் தயார் நிலையில் இருந்திட வேண்டும்.
யாத்திரீகர்கள் செல்லும் ஒவ்வொரு படகிலும் அனுமதிக்கப்பட்ட எண் ணிக்கையில் மட்டுமே யாத்திரீகர்கள் செல்வதை உறுதி செய்திட வேண்டும்.
கச்சத்தீவு யாத்திரைக்காக பயன்படுத்தப்படவுள்ள படகுகளின் உரிமம் மற்றும் காப்பீடு குறித்த விபரங்களை மீன்வளத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும்.
குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முழுமையாக செய்திட வேண்டும். இதுதவிர யாத்திரைக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் காவல் துறை, இந்திய கடலோர பாதுகாப்பு படை, இந்திய கப்பற்படை, சுங்கத்துறை மற்றும் உளவுத்துறை பணியகம் சார்ந்த அலுவலர்கள் ஒருங் கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் இருந்து கச்சத்தீவு விழாவிற்கு செல்ல விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் தடையின்மைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் பாலித்தீன் பைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் போன்றவற்றையும் படகுகளில் எடுத்துச் செல்லவும், அங்கிருந்து எடுத்து வரவும் அனுமதி இல்லை.
திருவிழாவை சிறப்பாக கொண்டாட சென்று வருவதற்கு அனைவரும் ஒத்து ழைப்பு நல்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சுங்கத்துறை துணை ஆணையர் ஜெய்சன் பிரவீன்குமார், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் தங்கவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி உள்பட அரசு அலுவலர்கள், கச்சத்தீவு யாத்திரைக்குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.