விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வெம்பூர் காலனி பகுதியில் உள்ள தூத்துக்குடி-அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை ரோட்டோரம் இன்று அதிகாலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் மாசார்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தர்மலிங்கம், ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்த வாலிபர் கபடி குழுவினர் அணியும், டி.சர்ட்டும், கருப்பு கலர் பேண்டும் அணிந்திருந்தார். அவரது கால்களில் அரிவாள் வெட்டுக்காயங்களும் இருந்தன. பின்னர் போலீசார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அந்த வாலிபர் கபடி வீரர் என்பது தெரியவந்துள்ளது.
எப்போதுவென்றானில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு கபடி போட்டி நடந்துள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கடத்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #tamilnews