செய்திகள்

பா.ஜனதா அரசு தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சி- கி.வீரமணி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் பாரதிய ஜனதா அரசு தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சிக்கிறது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

மதுரை:

மதுரையில் நடந்த பெண்கள் எழுச்சி மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உச்சநீதிமன்றம் விடுத்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். கர்நாடகாவில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கால தாமதம் செய்து வருகிறது.

தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சிக்கிறது.

மற்ற மாநிலங்களை போல் தமிழகத்தை பா.ஜனதா நினைக்கக்கூடாது. அப்படி நினைத்தால் அந்த கட்சி நோட்டாவிடம் மட்டுமே போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews