சமீபத்தில் நியூசிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றியது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தும், தொடர் நாயகன் விருதையும் பெற்ற ஷுப்மான் கில் பஞ்சாப் அணிக்காக களம் இறங்கினார்.
வோரா, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் பந்திலேயே வோரா ஆட்டமிழந்தார். அடுத்து மந்தீப் சிங் களம் இறங்கினார். மந்தீப் சிங் உடன் இணைந்து ஷுப்மான் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 25 ஓவரில் 125 ரன்கள் சேர்த்தது. மந்தீப் சிங் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் யுவராஜ் சிங் 28 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார்.
மறுமுனையில் விளையாடிய ஷுப்மான் கில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவருடன் இணைந்து குர்கீரத் சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவரில் பஞ்சாப் 3 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் குவித்தது. ஷூப்மான் கில் 122 பந்தில் 8 பவுண்டரி, 6 சிக்சருடன் 123 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். குர்கீரத் சிங் 35 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 252 பந்தில் 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா களம் இறங்கியது. 3-வது வீரராக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். லோகேஷ் ராகுல் அவுட்டாகும்போது கர்நாடகா 39.2 ஓவரில் 249 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 16 பந்தில் 21 ரன்களே தேவைப்பட்டது. ஆனால் கர்நாடகா அணியால் 16 பந்தில் 16 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.