பாரிஸ்:
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் முன்றாம்நிலை வீரரான மரின் சிலிக், பிரான்சின் ஜூலியன் பென்னெட்யூவை எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜூலியன் 7-6, 7-5 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதன் மூலம் சிலிக் பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரைவிட்டு வெளியேறினார்.
இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் 13-ம் நிலை வீரரான அர்ஜெண்டினாவின் ஜுவான் மார்டின் டெல் போர்டோ, 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னரை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில், இஸ்னர் 6-4, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதே பிரிவின் மற்றொரு காலிறுதி போட்டியில் 16-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜாக் சாக், ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவுடன் மோதினார். இப்போட்டியில் சாக் 6-7, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு காலிறுதி போட்டியில் முதல் நிலை வீரரான ரபேல் நடால், செர்பியாவின் பிலிப் கிரஜினோவிக்கை எதிர்கொள்ள இருந்தார். இருப்பினும் முந்தைய மூன்றாவது சுற்று ஆட்டத்தில் ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக நடால் அறிவித்தார். இதையடுத்து பிலிப் கிரஜினோவிக் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
இன்று நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் ஜாக் சாக், ஜூலியன் பென்னெட்யூவையும், பிலிப் கிரஜினோவிக், ஜான் இஸ்னரையும் எதிர்த்து விளையாட உள்ளனர்.