செய்திகள்

ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைய காரணம் என்ன?- அப்பல்லோ டாக்டரிடம் நீதிபதி கேள்வி

ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைவதற்கான காரணம் என்ன? காய்ச்சல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என்று அப்பல்லோ டாக்டரிடம் நீதிபதி ஆறுமுகசாமி கேள்வி எழுப்பினார். #Jayalalithaa #inquirycommission

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்கள். அவர்களது விளக்கம் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

விசாரணை ஆணையத்தில் 75-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரையில் ஆஜராகி உள்ளனர். அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் மட்டுமே 20-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று டாக்டர் கே.ஆர்.சுப்பிரமணியம் ஆணையத்தில் ஆஜரானார். பொது மருத்துவரான அவர் ஜெயலலிதாவிற்கு காய்ச்சல், நீர்சத்து குறைபாடு இருந்ததை கண்காணித்து சிகிச்சை அளித்தவர்.

இந்த நிலையில் ஜெ.தீபா சார்பில் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை நீதிபதி விசாரித்தார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையை ஆய்வு செய்ய வேண்டும், உணவு தயாரிக்கப்பட்டது குறித்தும் நேரில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி இருந்தார். அதன் அடிப்படையில் 29-ந்தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு நடத்தப் போவதாக நீதிபதி கூறினார்.