செய்திகள்

மோடி வருகை எதிரொலி - காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, காஷ்மீரில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்க தலைவர் யாசின் மாலிக்கை போலீசார் இன்று கைது செய்தனர். #NarendraModi #Kashmirprotest

ஸ்ரீநகர்:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பிரதமரின் வருகைக்கு காஷ்மீரில் செயல்பட்டு வரும் பல்வேறு பிரிவினைவாத தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையே, ஜே.ஆர்.எல் எனும் கூட்டு இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்க தலைவர்களான சயித் அலி ஷா கிலானி, மிர்வாஸ் உமர் பரூக் மற்றும் ஜே.கே.ஆர்.எல். அமைப்பின் தலைவர் முகமது யாசின் மாலிக் ஆகியோர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் காஷ்மீர் வரும் மோடிக்கு எதிர்ப்பை காட்டும் விதமாக, மக்களை திரட்டி லால் சவுக் சதுக்கத்தை நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, காஷ்மீரில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை போலீசார் இன்று கைது செய்தனர்.

இதுதொடர்பாக ஜே.கே.ஆர்.எல். அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், யாசின் மாலிக் ஜே.ஆர்.எல் எனும் கூட்டு இயக்க தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்து வீடு திரும்பிய அவரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டே அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார். #NarendraModi #Kashmirprotest

SCROLL FOR NEXT