செய்திகள்

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குடன் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோரா சந்திப்பு

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என். வோரா இன்று சந்தித்தார்.

புதுடெல்லி: 

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தற்போது காஷ்மீரில் நிலவும் நிலவரம் குறித்தும், அவற்றை சரிசெய்து இயல்பு நிலையை திரும்பக் கொண்டு வருவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, எல்லையில் அதிகரித்துள்ள ஊடுருவல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரையில் எல்லைப்பகுதியில் 285 முறை பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு முழுவதும் 228 முறை பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டு இருந்தது. 

கடந்த 8-ம் தேதி பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணகாதியில் அத்துமீறி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். இதேபோல கடந்த 12-ம் தேதி பூஞ்ச் மாவட்டத்தில் அதிகாலை அத்துமீறி நிழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பகுதியைச் சேர்ந்த 40-வயது பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.