ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் மெஹ்பூபா முப்தி தலைமையிலான கூட்டணி மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வை சேர்ந்த இரு மந்திரிகள் கலந்துகொண்டனர்.
சிறுமியை கற்பழித்து கொன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவான பேரணியில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மந்திரிகள் பங்கேற்ற சம்பவம் பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த பேரணியில் கலந்துகொண்ட பா.ஜ.க. மந்திரிகளான சந்திரபிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
ராஜினாமா கடிதத்தை ஜம்மு - காஷ்மீர் மாநில பா.ஜ.க. தலைவர் சத் சர்மாவிடம் அவர்கள் அளித்தனர். மாநில பா.ஜ.க. உயர்மட்ட கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பின்னர் அந்த கடிதங்களை பா.ஜ.க. மாநில தலைவர் சத் சர்மா அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாக காஷ்மீர் முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி இன்று தெரிவித்துள்ளார். #Kathuarapecase #BJPMinistersResign #ChaudharyLalSingh #ChanderPrakash