ஜொகன்னஸ்பர்க்:
தென்ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 5-ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கிம்பர்லீ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா அணி கேப்டன் டேன் வான் நெய்கெர்க் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் மந்தனா 129 பந்துகளில் 135 ரன்கள் (14 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்தார். ஹர்மன்பிரீத் கவுர் 55 ரன்களும், வேதா 51 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது.
அதைத்தொடர்ந்து 303 ரன்கள் என்ற இலக்குடன் தென்ஆப்ரிக்கா அணி களமிறங்கியது. தென்ஆப்ரிக்கா அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய லாரா வால்வார்ட், இந்திய பந்துவீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி பந்தில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஜூலன் கோஸ்வாமி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீராங்கனைகளில் ஜூலன் கோஸ்வாமி முதலிடத்தில் நீடிக்கிறார். அவரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் கத்ரின் பிட்ஸ்பாட்ரிக் 180 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
35 வயதான ஜூலன் கோஸ்வாமி, 166 ஒருநாள், 60 டி20 மற்றும் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் மிதாலி ராஜ், 6,190 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #JhulanGoswami #Firsttoclaim200Wickets #WODICricket