செய்திகள்

ஜாமின் கோரி லாலு பிரசாத் யாதவ் மனு - மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ், மருத்துவ சிகிச்சை பெற ஜாமின் கோரியிருந்த நிலையில், அவரது மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ராஞ்சி:

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன வழக்கில் தண்டிக்கப்பட்டு கடந்தாண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். 4 வழக்குகளிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அவருக்கு, தும்கா கருவூல மோசடி வழக்கில் மட்டுமே 14 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

69 வயதான லாலு கடந்த மாதம் 29-ம் தேதி அன்று உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், உடல் நலக்குறைவை காரணம் காட்டி மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அவர் ஜார்கண்ட் ஐகோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது ஜாமின் மனுவை இன்று விசாரித்த நீதிபதி அப்ரேஷ் குமார் சிங், லாலுவின் உடல் நிலை தொடர்பாக ஏய்ம்ஸ் மருத்துவர்கள் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். லாலுவின் ஜாமின் மனு குறித்து சி.பி.ஐ தனது பதிலை தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கை மே 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். #TamilNews

SCROLL FOR NEXT