ராஞ்சி:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஜார்க்கண்டிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. ஜார்க்கண்ட் சட்டசபையில் உறுப்பினர்கள் மற்றும் சட்டசபை செயலகத்தில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என முடிவுகள் வெளிவந்தன.
இதனை தொடர்ந்து ஜார்க்கண்ட் சட்டசபை செயலகம் சீல் வைக்கப்பட்டது. வருகிற 27ந்தேதி வரை சட்டசபை செயலகம் மூடப்பட்டு இருக்கும். கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெறும். அதன்பின்னரே செயலகம் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் என அறிவித்தது.
இதேபோன்று, சட்டசபை குழு கூட்டங்கள் அனைத்தும் வருகிற 31ந்தேதி வரை தற்காலிக ரத்து செய்யப்படுகின்றன. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என அரசு அறிவிப்பு தெரிவித்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அம்மாநில அரசு விதித்து, ஜார்க்கண்ட் அமைச்சரவை கூட்டத்தில், ஜார்க்கண்ட் தொற்று வியாதி அவசர சட்டத்திற்கு இன்று ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முக கவசங்களை அணியாவிட்டாலும், பொது இடங்களில் எச்சில் துப்பினாலும் அவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதேபோன்று 2 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.