ராமநாதபுரம்:
பரமக்குடி வைசியர் தெருவில் பிச்சை மணி என்பவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நகை கடை நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் திடீரென கடையை அடைத்து விட்டு குடும்பத்துடன் தலைமைறைவாகி விட்டார். இவரது கடையில் வழி மறிச்சான்பட்டி, பாம்பு உளுந்தான், ஆலிமருதை, நகரகுடி உள்ளிட்ட கிராமத்து ஏழை, எளிய மக்கள் நகைகளை செய்யவும், பழைய நகைகளை பாலிஷ் செய்யவும் கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் கடையை அடைத்து விட்டு தலைமறைவானார். இதுகுறித்து கடந்த மாதம் பரமக்குடி போலீசில் புகார் அளிக்கப்பட்டு எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் பாதிக்கப்பட்டோர் வழிமறிச்சான் பட்டியைச் சேர்ந்த லோகநாதன் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் பிச்சை மணி மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது நகை, பணத்தை மீட்டுத்தருமாறு ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.