நகைக்கடையில் நகை கொள்ளை 
செய்திகள்

நகைக்கடை பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை

ஈரோடு அருகே நகைக்கடை பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கர்நாடகா மாநில எல்லையில் உள்ள தாளவாடி ஓசூர் ரோட்டில் நகைக்கடை மற்றும் பேன்சி ஷோரூம் வைத்திருப்பவர் ரங்கசாமி.

இவரது சொந்த ஊர் தாளவாடி அருகே உள்ள தலமலை ஆகும். வழக்கம்போல் நேற்று இரவு தாளவாடியில் உள்ள தனது நகைக்கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.

இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் கடையை திறக்க சென்ற ரங்கசாமி அதிர்ச்சி அடைந்தார். அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

பிறகு கடையில் இருந்த 60 பவுன் நகையை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

இது குறித்து தாளவாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கைவரிசையில் ஈடுபட்டிருப்பது கர்நாடகா மாநில கொள்ளையர்களா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.