ராயபுரம்:
சவுகார்பேட்டை, பொன்னப்பன் தெருவில் வசித்து வருபவர் அசன்அலி. நகை தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஆரிப்காஜ் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
அவரிடம் 19 பவுன் நகையை கொடுத்து நன்னியப்பன் தெருவில் உள்ள ஒரு கடையில் தர பரிசோதனை செய்து வரும்படி அசன்அலி கூறினார்.
இதையடுத்து நகையுடன் ஆரிப்காஜ் சென்றார். அப்போது 2 வாலிபர்கள் அவனை வழிமறித்தனர். உரிமையாளர் அசன்அலி அனுப்பி உள்ளார். நகைக்கு பூஜை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதனை நம்பிய ஆரிப்காஜ் நகையை அவர்களிடம் கொடுத்தார். சிறிது நேரம் பூஜை செய்வதுபோல் நடித்த 2 வாலிபர்களும் நகையுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து யானை கவுனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.