செய்திகள்

கிரானைட் அதிபர் வீட்டில் 45 பவுன் நகை - ரூ. 6 லட்சம் கொள்ளை

கிரானைட் அதிபர் வீட்டில் 45 பவுன் நகை மற்றும் ரூ. 6 லட்சத்தை 2 வாலிபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். ஒருவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மதுரை:

மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் மகேஷ்குமார், கிரானைட் அதிபர். இவர் நேற்று இரவு குடும்பத்தினருடன் சினிமாவிற்கு சென்றார்.

நள்ளிரவில் அவர்கள் வீடு திரும்பியபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த மகேஷ்குமார் வீட்டுக்குள் சென்றார். அப்போது அங்கு 3 வாலிபர்கள் நின்றனர்.

அவர்கள், மகேஷ் குமாரை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை, மகேஷ்குமார் மற்றும் குடும்பத்தினர் விரட்டிச் சென்றனர்.

2 பேர் காம்பவுண்டு சுவரை தாண்டிக்குதித்து சென்று விட்ட நிலையில் ஒருவன் மட்டும் சிக்கினான். அவன் அண்ணாநகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டான்.

வீட்டில் இருந்த ரூ 6 லட்சம் மற்றும் 45 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பதாக மகேஷ்குமார் போலீசில் தெரிவித்தார். தப்பி ஓடிய 2 பேரும் நகை மற்றும் பணத்தை கொண்டு சென்று விட்டனர். அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து பிடிபட்டவன் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் கொள்ளையர்கள் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நகை, பணத்துடன் தப்பியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் கமுதி விரைந்துள்ளனர். #tamilnews