செய்திகள்

கேபின் அழுத்தத்தால் பயணிகளின் மூக்கில் ரத்தம் வழிந்தது- ஜெட் ஏர்வேஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

மும்பையில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கேபின் அழுத்தத்தால் பயணிகளின் மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் வழிந்து உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #JetFlight #MumbaiAirport

மும்பையில் இருந்து இன்று காலை ஜெய்ப்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 166 பயணிகளுடன் புறப்பட்டது. டேக் ஆப் ஆன சிறிது நேரத்திலேயே மீண்டும் மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. பயணிகள் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டனர். இதனால் விமான நிலையத்தில் திடீர் பரப்பரப்பு ஏற்பட்டது.

விமானம் புறப்படும் போது, விமான கேபின் அழுத்தத்தை பராமரிக்கும் சுவிட்சை ஆன் செய்ய விமான சிப்பந்தி மறந்துவிட்டதால், அதிக அழுத்தம் காரணமாக 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காது மற்றும் மூக்கு வழியாக இரத்தம் வழிந்துள்ளது.  சில பயணிகளுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மும்பை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.