செய்திகள்

சம்பளம் கிடைக்காததால் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் ஒருசேர விடுப்பு - 14 விமானங்கள் ரத்து

நிதி நெருக்கடியால் தள்ளாட்டம் போடும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 2 மாதங்களாக சம்பளம் வழங்காததால் விமானிகள் நேற்று ஒருசேர விடுப்பு எடுத்தனர். இதனால் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. #JetAirways #JetAirwaysPilots #Flightscancel #Pilotssick

மாலை மலர்

மலிவு கட்டணத்தில் விமானப் பயணம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் விமான போக்குவரத்து துறையில் தடம்பதித்த சில தனியார் நிறுவனங்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன.

அவ்வகையில், நிதி நெருக்கடியால் தள்ளாட்டம் போட்டுவரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் விமானிகள், பணிப்பெண்கள் மற்றும் பொறியாளர்களுக்கு சரியானபடி சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், செப்டம்பர் மாதத்துக்கான சம்பளத்தொகை அரைகுறையாக சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான சம்பளம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இதனால், அதிருப்தியடைந்த விமானிகள் நிர்வாகத்துக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அனைவரும் ஒருசேர நேற்று ‘சிக் லீவ்’ போட்டு மறைமுகமான போராட்டத்தில் குதித்தனர். இதனால் நாட்டின் பல பகுதிகளுக்கு செல்ல வேண்டிய 14 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த திடீர் அறிவிப்பால் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் பாதிப்புக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகினர்.