செய்திகள்

பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாமை 15 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்த அமெரிக்கா - பரபரப்பு தகவல்

பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாம் இருந்த இடத்தினை 15 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா அறிந்திருந்த தகவல் வெளியாகியுள்ளது. #JeMCampknownbyUS

மாலை மலர்

பாகிஸ்தான் பகுதிக்குள் 15 ஆண்டுகளுக்கு முன்னரே ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சி முகாம் இருந்தது அமெரிக்காவிற்கு தெரிய வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் வெளியே கசிந்த அமெரிக்க ராணுவ ஆவணங்களில் இதுபற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக, ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதியின் வாக்குமூலம் இடம் பெற்றிருந்தது. அதன்மூலம்  பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்கா துல்லியமாக அறிந்தது.

பாகிஸ்தானில் உள்ள குஜார் பகுதியைச்  சேர்ந்த ஹஃபீஸ் ரஹ்மான்(20), பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றதாகவும், அங்கு தனக்கு ஆரம்ப மற்றும் மேம்பட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்ததாக அந்த ஆவணத்தில் உள்ளது.

இந்த ஆவணத்தின் மூலம், ரஹ்மான் அமெரிக்கா மற்றும் அதன் நட்புறவு நாடுகளுக்கு எதிராக செயல்பட, ஜெய்ஷ் இ முகமது அமைப்பிடம் இருந்து பயிற்சி பெற்றுள்ளது தெரியவந்தது. ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பயங்கரவாதிகளை உருவாக்குவதோடு, அல் கொய்தாவுடன் நேரடி தொடர்பில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ரஹ்மான் முல்லா பயங்கரவாதிகளின் தூண்டுதலால், தலிபான் அமைப்பிற்கு உதவ சென்றுள்ளான். பாகிஸ்தானின் சஹிர் பகுதிக்கு சென்று ஜெய்ஷ் இ முகமது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றுள்ளான். பயிற்சி முடிந்த பின்னர் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்புடன் இணைந்து ஆப்கனிஸ்தான் சென்றுள்ளான். இதன்பின்னர் கியூபாவில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி அமெரிக்க ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டான்.

ஜெய்ஷ் இ முகமது பாகிஸ்தான் நாட்டின் உதவியோடு இயங்கக்கூடிய மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பு என்றும், அந்த அமைப்பு அமெரிக்காவை தாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என்றும் மேஜர் ஜெனரல் ஜாபரி மில்லர் தனது ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தார் . #JeMCampknownbyUS