செய்திகள்

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற புதிய வியூகம்- ஜேடிஎஸ், காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் புதிய வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

மாலை மலர்

கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) தலைவர் குமாரசாமி முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா துணை முதலமைச்சராகவும் பதவி வகிக்கின்றனர். இந்த ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், ஆட்சியைக் காப்பாற்ற தலைவர்கள் பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டி உள்ளது.  அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜக  தங்கள் பக்கம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க தொடர்ந்து முயற்சி செய்யலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.

இதையடுத்து  முதலமைச்சர் குமாரசாமியும், துணை முதலமைச்சர் பரமேஸ்வராவும் ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான புதிய வியூகங்களை வகுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் திட்டத்தை முறியடிப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அதிருப்தி எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு, பாஜக பக்கம் போக வேண்டாம் என்றும், அமைச்சரவையில் இடம் தருவதாகவும் கூறி சமாதானம் செய்துள்ளனர்.