செய்திகள்

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை விரைவில் அரசியல் கட்சியாக மாறும்- ஜெ.தீபா பேச்சு

தமிழக மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் எம்.ஜி.ஆர். அம்மா ஜெ. தீபா பேரவை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்று திருச்சி கூட்டத்தில் ஜெ.தீபா பேசியுள்ளார். #jdeepa #mgrammaDeepaperavai

மாலை மலர்

திருச்சி:

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் திருச்சியில் மறைந்த முதல்வர் ஜெயலலி தாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பேரவையின் மாநில பொதுச்செயலாளர் ஜெ. தீபா பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். மக்களுக்காக தொடங்கினார். அக்கட்சிக்கு ஜெயலலிதா பல்வேறு தியாகங்களை செய்து இறுதி மூச்சு உள்ள வரை வழி நடத்தி அவரும் மக்களுக்காகவே வாழ்ந்தார். அவர்களது வழியில் மக்கள் பணியாற்றவே எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை தொடங்கினேன்.

ஜெயலலிதா சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நினைவில் வைத்து மக்கள் பணியாற்றி, நல்லாட்சியை தமிழகத்தில் மலர செய்யும் நோக்கில் கட்சியை தொடங்கி நாம் செயல்பட்டு வந்த நிலையில், மத்திய அரசின் தலையீட்டால் பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது.

தற்போது மத்திய பா.ஜ.க. அரசின் கைக்கூலியாக ஒரு ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் மக்கள் என்னென்ன துயரங்களை சந்தித்தனரோ? அத்தனை துயரங்களையும் மத்திய பா.ஜ.க.அரசால் தமிழக மக்கள் இப்போது சந்தித்து வருகின்றனர். இந்த துயரத்தில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்றால் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

திரைப்பட நடிகர்கள் ஆளுக்கு ஒரு கட்சியை தொடங்கியுள்ளனர். திரைப்படத்தில் வருவது போல ஒரே நாளில் முதல்வராக போகின்றனரா? அல்லது டெல்லி தர்பார் ஆட்சியை தமிழகத்தில் நடத்தப் போகின்றனரா? என பொருத்திருந்து பார்ப்போம்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில் இதுவரை தெரிந்த உண்மையை மக்களிடம் தெளிவுபடுத்தவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்திட வேண்டும். தமிழக மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் எம்.ஜி.ஆர். அம்மா ஜெ. தீபா பேரவை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.  #tamilnews #jdeepa #mgrammaDeepaperavai