சென்னை:
டெல்லியில் உள்ள நிர்மாண் பவனில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை மந்திரி அர்மிப்சிங்புரியை தென் சென்னை எம்.பி. ஜெயவர்தன் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உலகத் தரம் வாய்ந்த நகரமாக உருவாக்க மத்திய அரசு கூடுதலான நிதியை ஒதுக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மையை பொறுத்த வரையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
சென்னை, சோழிங்கநல்லூர், பெருங்குடி குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றவும், இனிவரும் காலங்களில் குப்பைகள் சேராமல் தவிர்க்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனாலும் மத்திய அரசு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்கி இத்திட்டத்தை செயல்படுத்த வெண்டும். சென்னை போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டப்பணிகளுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
தென் சென்னை தொகுதியிலுள்ள 7 ஊராட்சிகள் உள்ளடங்கிய துணை கோள் நகரம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கி செயல்படுத்தும் போது உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன் பொதுமக்களின் வாழ் வாதாரத்தை உயர்த்த அம்ருத் திட்டத்தின் கீழ் போதிய நிதியை ஒதுக்கவேண்டும்.
நாடு முழுவதும் ஏற்கனவே கட்டியிருக்க கூடிய குடிசை மாற்று வாரிய வீடுகள் பழுதடைந்த நிலையில் இருப்பதால் குடிசை மாற்று வாரிய வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்க ஒரு சிறப்பு திட்டத்தை மத்திய அரசு உடனே வகுக்க வேண்டும்.
இவ்வாறு ஜெயவர்தன் எம்பி. அந்த கோரிக்கை மனுவில் கூறி உள்ளார். #MetroTrain