செய்திகள்

கனிமவளத்தை சூறையாட திட்டமிட்டே குரங்கணி மலைக்கு தீவைப்பு- ஜெயராமன்

குரங்கணி வனப்பகுதி மலையின் கனிமவளம் மற்றும் பாறைகளை உடைத்தெடுக்க திட்டமிட்டே தீ வைக்கப்பட்டதாக தெரிகிறது என்று பேராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளார்.

மாலை மலர்

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கடம்பங்குடியில் ஓ.என்.ஜி.சி. நிறுவன பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் கடந்த ஆண்டு போராட்டம் நடந்தது. இதில் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமார், இந்த வழக்கில் இருந்து பேராசிரியர் ஜெயராமன் உள்பட 8 பேரையும் விடுதலை செய்து நேற்று தீர்ப்பு அளித்தார்.

இதையடுத்து பேராசிரியர் ஜெயராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேனி மாவட்டம் குரங்கணி மலையை பன்னாட்டு நிறுவனங்கள் அபகரிக்க திட்டமிட்டுள்ளன. கனிம வளத்துக்காக அதை கைப்பற்ற வைத்த தீயில் இதுவரை 11 பேர் பலியாகி விட்டனர். மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

குரங்கணி வனப்பகுதி மலையை கைப்பற்ற திட்டமிட்டே வைத்த தீ சில தினங்களாகவே மலைப்பகுதியில் எரிந்து கொண்டு இருந்தது. தண்ட காரண்யத்தில் இருந்த மலைவாழ்மக்களை அப்புறப்படுத்த வேதாந்தா நிறுவனம் மேற்கொண்டது போல இங்கும் தீ செயற்கையாக வைக்கப்பட்டுள்ளது. தீ வைத்தால் வனவளம், வனவிலங்குகள் அழிந்து விடும். அதன்பிறகு யாரும் அங்கு செல்ல விரும்ப மாட்டார்கள்.

இதனால் மலையை எளிதாக கைப்பற்றி கனிமவளம் மற்றும் பாறைகளை உடைத்தெடுக்கலாம் என்று திட்டமிட்டே தீ வைக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இந்த தீயில் இத்தனை பேர் இறப்பார்கள் என்று தீ வைத்தவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews