செய்திகள்

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் அரசின் முடிவில் மாற்றமில்லை- மத்திய மந்திரி திட்டவட்டம்

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என விமான போக்குவரத்துத்துறை இணைமந்திரி ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

ஏர் இந்தியா நிறுவனத்தின் பெருகி வரும் நிர்வாக செலவுகளும், லாபமற்ற வர்த்தக நடைமுறைகளையும் கருத்தில் கொண்டு அந்நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என விமான போக்குவரத்துத்துறை இணைமந்திரி ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர் இந்த தகவலை தெரிவித்தார். 

கடந்த செப்டம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 51,890 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் விமானங்கள் வாங்குவதற்காக பெறப்பட்ட கடன் 18,364 கோடி ரூபாய் எனவும், 33,526 கோடி ரூபாய் நிறுவனத்தின் மற்ற முக்கிய செயல்பாடுகளுக்காக பெறப்பட்டவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2016-17ம் ஆண்டில் விமான போக்குவரத்தின் மூலம் 215 கோடி ரூபாய் லாபம் கிடைத்தாலும், 3,643 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இழப்புகளை ஈடு செய்யும் வகையில் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. எனவே அந்த முடிவில் மாற்றமில்லை என அவர் கூறியுள்ளார்.