ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 28). இவருக்கும் கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜின் மகள் மகாலட்சுமிக்கும்(20) கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு 3 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் மகாலட்சுமியும், பெரியசாமியும் கல்லாத்தூர் கிராமத்திற்கு வந்து கடந்த 11 நாட்களாக தங்கி இருந்துள்ளனர். மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை ஏதுமின்றி பெரியசாமி வீட்டிலேயே இருந்ததாகவும், இதுதொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மகாலட்சுமி, வீட்டு உத்திரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக செல்வராஜ், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப்பதிந்து மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இது குறித்து விசாரித்து வருகிறார். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆனதால் மகாலட்சுமியின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை விசாரணை மேற்காண்டு வருகிறார்.