சென்னை:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நினைவிடத்தில் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் உள்ள ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
அதிமுக சார்பில் சென்னை அண்ணா சாலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரை நோக்கி அமைதிப் பேரணி நடைபெற்றது.
பேரணியில் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர். கூட்டணி கட்சியினரும் இதில் கலந்துகொண்டனர்.
அமைதி பேரணியை முன்னிட்டு வாலாஜா சாலை மற்றும் கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.