செய்திகள்

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை வைக்கும் பணிகள் தொடங்கியது

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிலை அமைக்கும் பணிகள் இன்று தொடங்கியது. #Jayalalithaa

மாலை மலர்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் எம்.ஜி.ஆருக்கு சிலை உள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் ஜெயலலிதாவுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று நிர்வாகிகளும் தொண்டர்களும் வற்புறுத்தி வந்தனர்.

தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ஜெயலலிதா சிலை அமைக்கும் பணிகள் இன்று தொடங்கியது. சிலை அமைப்பதற்காக முதல் கட்டமாக இன்று பள்ளம் தோண்டப்பட்டது.


அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகேயே ஜெயலலிதா சிலை அமைக்கப்படுகிறது. இதையடுத்து எம்.ஜி.ஆர். சிலை அருகே இருந்த கொடிக் கம்பம் அகற்றப்பட்டு வேறு இடத்தில் வைக்கப்பட உள்ளது.

எம்.ஜி.ஆர். சிலையையும், ஜெயலலிதா சிலையையும் ஒரே பீடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் எம்.ஜி.ஆர். சிலையை ஒட்டியே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

வருகிற 24-ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாள் ஆகும். அன்று ஜெயலலிதா சிலையை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.