ஜெ.தீபக், ஜெ.தீபா 
செய்திகள்

போயஸ் கார்டனில் நினைவு இல்லம் அமைக்க கூடாது- ஜெயலலிதாவின் வாரிசுதாரர்கள் தீபா, தீபக் மனு

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுதாரர்களான தீபா, தீபக் மனு அளித்துள்ளனர்.

சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அவரது அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் நேரடி வாரிசுகள் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. மேலும், ஜெயலலிதாவின் சொத்துக்களை எடுப்பது தொடர்பாக அரசு சட்டம் இயற்றினால், அதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, நிவாரணம் பெறவேண்டும் என்று நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

இந்நிலையில், போயஸ் கார்டனில் ஒரு பகுதியை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா, தீபக் ஆகியோர் இன்று சென்னை கிண்டி கோட்டாட்சியர் என்.லெட்சுமியிடம் மனு அளித்தனர். 

ஜெ.தீபா, தீபக் சார்பில் வழக்கறிஞர்கள் சுதர்சன், சுப்பிரமணி ஆகியோர் இந்த மனுக்களை அளித்தனர். 

அதில், ஐகோர்ட் உத்தரவின்படி ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு ஜெ.தீபா, தீபக் தான் வாரிசுதாரர்கள் எனவும், அவர்களின் அனுமதி இன்றி நினைவில்லம் அமைக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.