செய்திகள்

ஜெயலலிதா மரண விசாரணை: அரசு டாக்டர் பாலாஜி 3-வது முறையாக ஆஜர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு அரசு டாக்டர் பாலாஜி 3-வது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்தார். #JayalalithaDeath

மாலை மலர்

சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை ஆணையம் அனுப்பும் சம்மன் அடிப்படையில் இதுவரை 30-க்கும் மேற்பட்டவர்கள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சகிச்சை பெற்றபோது திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய சட்ட மன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களுக்காக தேர்தல் ஆணையத்தில் அளித்த படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டிருந்தது.

அந்த சமயத்தில் தனது முன்னிலையில்தான் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டதாக அரசு டாக்டர் பாலாஜி சாட்சி கையெழுத்து போட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் அவருக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.

இதை ஏற்று அரசு டாக்டர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் கடந்த டிசம்பர் 7-ந்தேதியும், ஜனவரி 25-ந்தேதியும் 2 முறை ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

இன்று 3-வது முறையாக டாக்டர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார். #JayalalithaDeath #tamilnews