சென்னை:
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க. அம்மா-புரட்சித்தலைவி அம்மா) ஆகியோர் அடங்கிய அணியினருக்கும், டி.டி.வி.தினகரன் அணியினருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.
இதற்காக டி.டி.வி. தினகரன் தரப்பில் நேற்று தேர்தல் கமிஷனில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன்மூலம் தேர்தல் கமிஷனில் இதுவரை 2,140 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக டிடிவி தினகரன் தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
ஆனால், பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகக் கூறும் எடப்பாடி அணியினர், மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர்.
இதுபற்றி சென்னை பட்டினம்பாக்கத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், தினகரன் தரப்பு எத்தனை ஆவணங்களை வழங்கினாலும் கட்சியும், சின்னமும் எங்களுக்குத் தான் கிடைக்கும் என்றார்.