ஜெயலலிதா மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிசிச்சைகள் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உறவினர்கள், பணியாளர்கள் என பலரிடம் விசாரணை நடந்துள்ளது. இதில் சிலர் மீண்டும் வரவழைக்கப்பட்டு குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
அதன்பின்னர் முக்கிய பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆணையத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். அப்போது, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.