செய்திகள்

அமித் ஷா மகன் பற்றி அவதூறு செய்தி: இணையதள ஊடகம் மீது ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு

அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட ’தி ஒயர்’ என்ற இணையதள ஊடகம் மீது ரூ.100 கோடி மான நஷ்ட இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்படும் என மத்திய மந்திரி பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

பிரதமர் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பலனடைந்தது பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மற்றும் அவரது மகனும் தான் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில், பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா நடத்தி வரும் நிறுவனங்களின் நிதியாண்டு அறிக்கை மற்றும் ஆண்டறிக்கை விவரங்களை இன்று வெளியிட்டிருந்தார்.

அதில், பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவுக்கு சொந்தமான டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவே லிமிடெட் நிறுவனம் கடந்த 2013-14-ம் நிதி ஆண்டை காட்டிலும், 2015-16-ம் நிதி ஆண்டில் 80 கோடி அளவுக்கு நிகர லாபம் அடைந்துள்ளது என்பதை அவர் வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பான, செய்திகளை வெளியிட்ட ’தி ஒயர்’ என்ற இணையதள ஊடகம் மீது ரூ.100 கோடி மான நஷ்ட இழப்பீடு கேட்டு அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா வழக்கு தொடரப் போவதாக மத்திய மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார்.

மேலும், அமித் ஷா மற்றும் அவரது மகனுக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் பா.ஜ.க. முற்றிலுமாக மறுப்பதாகவும் பியுஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.