பரமக்குடி:
மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா பரமக்குடியில், நிருபர்களிடம் கூறியதாவது:-
நம்நாடு வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு தற்போது கார்பரேட் ஆதிக்கத்திற்கு சென்றுள்ளது. அனைவரையும் அரவணைக்கும் தேசமாக இந்தியா வரவேண்டும். மத்திய அரசு தேசிய கடல்வள மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. இதனால் கடலில் 12 மைல் தூரத்தில் தான் மீன் பிடிக்க வேண்டும்.
கூடுதல் தூரம் செல்ல வேண்டுமானால் கடலோர காவல் படையினரிடம் அனுமதி பெற வேண்டும். மீறினால் ரூ 6 லட்சம் முதல் ரூ 9 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இல்லையென்றால் மீனவர்களின் படகுகள், வலைகளை கைப்பற்றி விடுவார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எதிராக தேசிய கடல் வளம் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
மீனவர்கள் நலனில் அக்கறை கொண்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து மசோதாவை திருத்த வழிவகை செய்ய வேண்டும். இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார தேக்க நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.