போட்டி ‘டை’யில் முடிய மலிங்கா, பும்ரா ஆகியோரின் சிறந்த பந்து வீச்சுதான் முக்கிய காரணமாக அமைந்தது. முகமது நபி களம் இறங்கும்போது ஐதராபாத் 14.3 ஓவரில் 105 ரன்கள் எடுத்திருந்தது. 5.3 ஓவரில் 58 ரன்கள்தான் தேவைப்பட்டது. மணிஷ் பாண்டே ஒரு முனையில் நல்ல பார்முடன் இருந்தார். முகமது நபி அவருடன் இணைந்து இலக்கை எட்டி விடலாம் என்று நினைத்தார்.
ஆனால் பும்ரா மற்றும் மலிங்கா ஆகியோர் யார்க்கம் மற்றும் லெந்த் பந்து வீச்சின் மூலம் அவர்களின் நம்பிக்கையை சீர்குலைத்தனர். பின்னர் நடைபெற்ற சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. மணிஷ் பாண்டே 47 பந்தில் 71 ரன்களும், முகமது நபி 20 பந்தில் 31 ரன்களும் சேர்த்தனர். இருவரும் 31 பந்தில் 49 ரன்கள் சேர்த்தனர்.
இப்போட்டி குறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் முகமது நபி கூறுகையில் ‘‘நாங்கள் மிகப்பெரிய ஹிட் ஷாட்ஸ் அடிக்க முயற்சி செய்தோம். ஆனால், அவர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். மலிங்கா மற்றும் பும்ரா ஆகியோரின் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. அதேபோல் அவர்கள் சிறந்த யார்க்கர் பந்துகளை வீசினார். நாங்கள் பிக் ஷாட் அடிக்கலாம் என்று நினைக்கும்போது, அவர்கள் யார்க்கராக பந்தை வீசினர். இதனால் எங்களால் சிக்ஸ் அடிக்க முடியவில்லை. அதனால்தான் ஒவ்வொரு ரன்களாக சேர்க்க முடிந்தது.